திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம்
ஐந்தாம் திருமுறை
5.76 திருக்கானூர் - திருக்குறுந்தொகை
திருவின் நாதனுஞ் செம்மலர் மேலுறை
உருவ னாயுல கத்தி னுயிர்க்கெலாங்
கருவ னாகி முளைத்தவன் கானூரிற்
பரம னாய பரஞ்சுடர் காண்மினே.
1
பெண்டிர் மக்கள் பெருந்துணை நன்னிதி
உண்டின் றேயென் றுகவன்மின் ஏழைகாள்
கண்டு கொண்மின்நீர் கானூர் முளையினைப்
புண்ட ரிகப் பொதும்பி லொதுங்கியே.
2
தாயத் தார்தமர் நன்னிதி யென்னுமிம்
மாயத் தேகிடந் திட்டு மயங்கிடேல்
காயத் தேயுளன் கானூர் முளையினை
வாயத் தால்வணங் கீர்வினை மாயவே.
3
குறியில் நின்றுண்டு கூறையி லாச்சமண்
நெறியை விட்டு நிறைகழல் பற்றினேன்
அறிய லுற்றிரேல் கானூர் முளையவன்
செறிவு செய்திட் டிருப்பதென் சிந்தையே.
4
பொத்தல் மண்சுவர்ப் பொல்லாக் குரம்பையை
மெய்த்த னென்னு வியந்திடேல் ஏழைகாள்
சித்தர் பத்தர்கள் சேர்திருக் கானூரில்
அத்தன் பாத மடைதல் கருமமே.
5
கல்வி ஞானக் கலைப்பொரு ளாயவன்
செல்வம் மல்கு திருக்கானூ ரிசனை
எல்லி யும்பக லும்மிசை வானவர்
சொல்லி டீர்நுந் துயரங்கள் தீரவே.
6
நீரும் பாரும் நெருப்பும் அருக்கனுங்
காரும் மாருதங் கானூர் முளைத்தவன்
சேர்வு மொன்றறி யாது திசைதிசை
ஓர்வு மொன்றில ரோடித் திரிவரே.
7
ஓமத் தோடயன் மாலறி யாவணம்
வீமப் பேரொளி யாய விழுப்பொருள்
காமற் காய்ந்தவன் கானூர் முளைத்தவன்
சேமத் தாலிருப் பாவதென் சிந்தையே.
8
இப்பதிகத்தில் ஒன்பதாம் செய்யுள் சிதைந்து போயிற்று.
9
வன்னி கொன்றை எருக்கணிந் தான்மலை
உன்னி யேசென் றெடுத்தவன் ஒண்டிறல்
தன்னை வீழத் தனிவிரல் வைத்தவன்
கன்னி மாமதிற் கானூர்க் கருத்தனே.
10
திருச்சிற்றம்பலம்

மேலே செல்க

முன்பக்கம்

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com